ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:
தனியன்
ஜ்யேஷ்டாமாஸே த்வநூராதே ஜாதம் நாதமுநிம் பஜே|
ய: ஸ்ரீஸடாரே: ஸ்ருதவாந் ப்ரபந்த மகிலம் குரோ:
அர்த்தம்
ஆனி அனுஷத்தில் அவதரித்தவராய், ஆசார்யரான நம்மாழ்வாரிடமிருந்து எல்லா திவ்யப்ரபந்தங்களையும் கேட்டவரான நாதாமுனிகளிடம் பக்தி செய்கிறேன்.
வைபவம்:
ஆழ்வார்கள் காலத்திற்குப் பிறகு நெடுநாள் வரையில் தர்சன நிர்வாஹகர்களான ஆசார்யர்கள் ஒருவரும் இல்லாமல் இவ்வுலகம் இருள்மூடியே இருந்ததனால் பேரருட்கடலான எம்பெருமான் இவ்விருளை நீக்கி ஞானவொளியை வளர்க்கத் திருவுள்ளம்பற்றி ஸ்ரீமந் நாதமுனிகள் முதலான ஸதாசார்யர்களை அவத்தரிக்கச்செய்து அவர்களின் உபதேசங்களாலும் அநுஷ்டாநங்களாலும் ஜகத்தை வாழ்வித்து அருளினான்.
ஆசாரியர்களில் முதல்வரான ஸ்ரீமந்நாதமுனிகள் ஸேனைமுதலியாருடைய முக்கியமான படைத்தலைவரான கஜாநநர் என்னும் யானை முகமுடைய நித்யஸுரியினுடைய அம்ஸமாய், சோழ தேசத்தில் உள்ள வீரநாராயணபுரம் என்னும் காட்டுமன்னார்கோவிலில் கிபி 823 ஆம் ஆண்டு ஆனி மாதம் 7ஆம் தேதி புதன்கிழமை பௌர்ணமி திதி அநுராதா நக்ஷத்ரத்தில் அவதரித்தார். ஸ்ரீரங்கநாதன் என்பது அவர் திருநாமம். அவர் யோகத்திலே வல்லவராய் இருந்தபடியால் முனி என்கிற சப்தம் சேர்ந்து ஸ்ரீரங்கநாதமுனி என்று வழங்கப்பட்டார்.
ஒரு சமயம் வீரநாராயணபுரத்து எம்பெருமானை சேவிக்க வந்த ஸ்ரீவைஷ்ணவ சேவார்த்திகள் “ஆராவமுதே” என்று தொடங்கும் திருவாய்மொழியை மன்னனார் திருமுன்பே அநுஸந்தித்தருள, அதைக் கேட்ட நாதமுனிகள் மிகவும் உகந்து, இத்திருவாய்மொழியின் சாற்றுப்பாசுரத்திலே, “ஓராயிரத்துள் இப்பத்தும்” என்று அருளிச்செய்யப்பட்டு இருக்கிறதே, ஆயிரம் பாசுரங்களும் உங்களுக்குத் தெரியுமா? என்று அவர்களிடம் வினவினார். அவர்களும் இப்பத்து பாசுரங்களைத் தவிர மற்றவை கிடைக்கவில்லை என்று கூறிவிட்டார்கள். பாசுரத்தில் “குருகூர் சடகோபன்” என்று இருப்பதால் நாதமுனிகள் திருக்குருகூருக்குச் சென்று ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவம்சத்தில் அவதரித்த ஸ்ரீ பராங்குசதாசரை விசாரித்தார். அவரும் திருவாய்மொழியும் மற்ற திவ்யப்ரபந்தங்களும் நீண்ட காலத்துக்கு முன்பே மறைந்து விட்டன. ஆனால் நம்மாழ்வாரைப் பற்றி எங்கள் குலகூடஸ்தர் ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அருளிச்செய்த “கண்ணிநுண்சிறுத்தாம்பு” என்ற திவ்யப்ரபந்தத்தை எங்களிடம் அளித்து இதை ஒரு முகமாக ஆழ்வார் திருமுன்பே இருந்து அவருடைய திருவடிகளைத் தியானித்துக் கொண்டு நியமத்துடன் பன்னீராயிரம் முறை அநுசந்தித்தால் ஆழ்வார் ப்ரத்யக்ஷமாவார் என்று அருளிச்செய்ததாக ஸ்ரீமந் நாதமுனிகளிடம் தெரிவித்தார்.
நாதமுனிகளும் கண்ணிநுண்சிறுத்தாம்பை அவரிடம் ப்ரார்த்தித்து உபதேசமாகப் பெற்று ஆழ்வார் திருமுன்பே பன்னீராயிரம் முறை நியமத்துடன் அநுசந்தித்தார். நம்மாழ்வார் அவருக்கு ப்ரத்யக்ஷமாகி உமக்கு என்ன வேணும் என்று கேட்க, திருவாய்மொழி முதலான திவ்யப்ரபந்தங்களை அடியேனுக்கு இரங்கி அருளவேணும் என்று நாதமுனிகள் விண்ணப்பம் செய்ய, பரமகாருணிகரான நம்மாழ்வார் திருவாய்மொழி முதலான திவ்யப்ரபந்தங்களையும், அவற்றின் பொருளையும், அஷ்டாங்க யோகரஹஸ்யத்தையும், ரஹஸ்யத்ரயம் முதலான ஸகல சாஸ்திரங்களையும் சேர்த்தே அநுக்ரஹித்து அருளினார்.
மிகவும் ப்ரயாஸப்பட்டு திவ்யப்ரபந்தங்களைப்பெற்று தம் மருமக்களான மேலையகத்தாழ்வான் கீழையகத்தாழ்வான் இருவருக்கும் இசையோடு கற்பித்து எம்பெருமான் சந்நிதிகளில் பாடுவித்தார். நாதமுனிகள் மற்றும் இந்த இருவருமே நாம் இப்போது சேவித்துக் கொண்டிருக்கும் அரையர் என்று திவ்யப்ரபந்தம் விண்ணப்பம் செய்வாருடைய மூலபுருஷர்கள் ஆவர்.
திவ்யப்ரபந்தங்களின் ஸேவாக்ரமம் இவர் ஏற்படுத்தியதே. திருமங்கை ஆழ்வார் நடத்தி, பின்பு நின்றிருந்த திருவாய்மொழித் திருநாள் என்னும் திரு அத்யயன உத்ஸவத்தையும் மறுபடி நடக்கும் படி ஏற்படுத்தியதும் ஸ்ரீமந்நாதமுனிகளே.
வடமொழி வேதத்துக்கு வேதவியாச பகவான் போலே தமிழ் மறைக்கு ஸ்ரீமந் நாதமுனிகள். ஆழ்வார்களின் அருளிச்செயல்களை முதலாயிரம், பெரிய திருமொழி, திருவாய்மொழி மற்றும் இயற்பா என நான்காக வகுத்து, முதல் மூன்றையும் இசையாகக் கானம் செய்தும் நான்காமதை இயலாக ஓதியும் வந்தார். திருமங்கை மன்னன் திருவாய்மொழிக்குப் பெற்றது போல் நாதமுனிகள் அரங்கநாதனை வேண்டி திருமொழிக்கும் வேத சாம்யம் பெற்றார். நாதமுனிகள் காலந்தொட்டு திருவரங்கத்தில் இந்த ஒப்புயர்வற்ற அத்யயன உத்ஸவம் இருபத்தொரு நாள் விழாவாக நடைபெற்று வரலாயிற்று. திவ்யப்ரபந்தங்கள் நமக்குக் கிடைப்பதற்கு மூல காரணமாய் இருந்த ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு வைணவ உலகம் பட்டிருக்கும் கடன் அளவிடமுடியாது.
இவருடைய திருவடிகளில் ஆஸ்ரயித்த சிஷ்யர்கள் எண்மர்.
உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன்,
நம்பி கருணாகர தாஸர்,
ஏறுதிருவுடையார்,
திருக்கண்ணமங்கையாண்டான்,
வானமாமலைத்தேவியாண்டான்,
உருப்பட்டூர் ஆச்சான்பிள்ளை மற்றும்
சோகத்தூர் ஆழ்வான் ஆகியோர் ஆவர்.
ஸ்ரீமந் நாதமுனிகள் மூலம் அனாதியான ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் இவ்வுலகில் நம்மாழ்வார் அருளால் ப்ரஸித்தமாயிற்று.
அருளிச்செய்த நூல் – நியாய தத்வம், யோக ரஹஸ்யம்
இப்படி இருக்கையில் ஒருநாள் சோழராஜன் ஸபரிவாரனாய் வேட்டையாட வந்து திரும்பிப்போகையில், இவருடைய பெண்பிள்ளைகள் வந்து “நம் அகத்திலே ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண்பிள்ளையுமாக வந்து நாதமுனிகள் எங்கே என்று தேடிப்போனார்கள்” என்று தெரிவிக்க, அது கேட்ட நாதமுனிகள் பெருமாளும், பிராட்டியும், இளையபெருமாளும் சிறியதிருவடியுமாக இந்நால்வர் வந்திருக்கக் கூடும் என்று எண்ணி, அவர்களை பின் தொடர்ந்து சென்ற நாதாமுனிகள் எதிரே வந்தவர்களிடம் இப்படி யாரையேனும் பார்த்தீர்களா என்று கேட்டுக்கொண்டே கங்கைகொண்டசோழபுரத்திற்கு முன்பு அமைந்துள்ள செம்போடை என்னும் சொர்க்கப்பள்ளம் என்ற சிற்றூர் வரை சென்று அங்கு இருந்தவர்களிடம் விசாரிக்க, அவர்கள் நாங்கள் பார்க்கவில்லை என்று தெரிவித்தார்கள். நாதமுனிகளும் ஏங்கி விழுந்து மோஹித்து அங்கேயே திருநாடு அலங்கரித்தார். இதுவே நாதமுனிகளின் திருவரசு அமைந்துள்ள இடம் ஆகும்.
வாழித்திருநாமம்
ஆனிதனில் அனுட்டத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தாருக்கு உபதேசம் அருளிவைத்தான் வாழியே
பானுதெற்கிற் கண்டவன் சொல் பல உரைத்தோன் வாழியே
பராங்குசனார் சொற்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத்தாளத்திற் கண்டு இசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே
நானிலத்திற் குருவரையை நாட்டினான் வாழியே
நலந்திகழ் நாதமுனி நற்பதங்கள் வாழியே
வாழி எதிராசன்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்