ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:
வைகாசி விசாகம் –
கலி பிறந்து 43வது நாளில் ப்ரமாதி வருஷத்தில் வைகாசி மாதம் விசாக நக்ஷத்ரத்தில் அவதரித்தவரும், மற்ற ஆழ்வார்கள் அனைவரையும் அவயவங்களாகக் கொண்டவரும், ப்ரபன்ன ஜநகூடஸ்தருமான நம்மாழ்வாருடைய திருநக்ஷத்ரம்.
தனியன்
வ்ருஷபே து விஸாகாயாம் குருகாபுரி காரிஜம்
பாண்ட்யதேஸே கலேராதௌ ஸடாரிம் ஸைந்யபம் பஜே||
தனியன் விளக்கம்:
கலியுகத்தின் ஆதியில் வைகாசி விசாகத்தில் பாண்டிய தேசத்தில் உள்ள திருக்குருகூரில் காரி என்பவருக்குக் குமாரராய் ஸேனைமுதலியார் எனப்படும் விஷ்வக்ஸேநரின் அம்சமாய் அவதரித்த ஸடகோபரை உபாசிக்கிறேன்.
நம்மாழ்வார் விஷயமாக ஆளவந்தார் அருளிச்செய்த தனியன்
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ்
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத்ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா|
காரிமாறன், குருகூர்சடகோபன், வகுளாபரணன், மகிழ்மாலைமார்பினன், பராங்குசர், ஸ்ரீ சடாரி மற்றும் ப்ரபந்நஜநகூடஸ்தர் என்று பல திருநாமங்கள் ஆழ்வாருக்கு உண்டு.
ஆழ்வார்களுள் ஐந்தாமவராக தோன்றினரெனினும் வைபவ விசேஷங்களினால் இவரே முதன்மை பெற்றவர். ஒரு காலவிசேஷத்தில் திவ்யப்ரபந்தங்கள் எல்லாம் லோபம் அடைந்து இருக்கையில், ஸ்ரீமந்நாதமுனிகள் நம்மாழ்வார் விஷயமாக ஸ்ரீ மதுரகவிகள் அருளிச் செய்திருந்த கண்ணிநுண்சிறுத்தாம்பு ப்ரபந்தத்தை நியமத்துடன் ஜபித்து யோகதசையில் ஆழ்வாரை ஸாக்ஷாத்கரித்து இவர் முகமாகவே நாலாயிர திவ்யப்ரபந்தங்களை உபதேசமாகப் பெற்றார். இது காரணமாகவே இவருடைய வாழித் திருநாமத்தில் “நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே என்று அநுஸந்திக்கப் படுகிறது.
ஆழ்வார் அவயவ ப்ராபாவம்:
இவர் ஆழ்வார்களின் தலைவராகவும் மற்றைய ஆழ்வார்களை அவயவங்களாகக் கொண்டவராகவும் நம் ஸ்ரீவைஷ்ணவப் பெரியோர்களால் கொண்டாடப்படுகிறார். இவருக்கு பூதத்தாழ்வார் ஸிரஸ்ஸாகவும், பொய்கையாழ்வார் மற்றும் பேயாழ்வார் திருக்கண்களாகவும், பெரியாழ்வார் திருமுகமாகவும், திருமழிசை ஆழ்வார் கழுத்தாகவும், குலசேகர ஆழ்வார் மற்றும் திருப்பாண ஆழ்வார் கைகளாகவும், திருமங்கை ஆழ்வார் கொட்பூழாகவும், மதுரகவி ஆழ்வாரைத் திருவடிகளாகவும், எம்பெருமானாரை திருவடி நிலைகளாகவும் (பாதுகை) வழங்குவது மரபு.
ஒப்பு உயர்வற்ற இவ்வாழ்வார் எம்பெருமானுடைய திருவடி நிலையாகவே இருப்பதால் பின்னானார் வணங்கும் சோதியாக எம்பெருமான் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் பெருமாளுடைய பாதுகை ஸடாரி என்றும் ஸடகோபன் என்றும் வழங்கப்படுகிறது.
வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் என்று கொண்டாடப்படுபவரான ஸ்வாமி நம்மாழ்வார், உலகை ரக்ஷிக்கும் பொருட்டு நான்கு வேதங்களில் உள்ள ஸாரப்பொருளை எடுத்து, முறையே நான்கு திவ்யப்ரபந்தங்களை அருளிச் செய்துள்ளார். ரிக் வேத ஸாரமாக திருவிருத்தம், யஜுர் வேத ஸாரமாக திருவாசிரியம், அதர்வண வேத ஸாரமாக பெரிய திருவந்தாதி மற்றும் ஸாம வேதத்தின் ஸாரமாக “ஸஹஸ்ரகீதி’ என்னும் திருநாமமுள்ள திருவாய்மொழி ஆகியவை ஆகும்.
நம்மாழ்வாருடைய பெருமைகளையும், அவர் நூல்களின் பெருமைகளையும், அவற்றுள்ளும் சிறப்பாகத் திருவாய்மொழியின் பெருமைகளையும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்த ஆசார்ய ஹ்ருதயம் என்னும் நூல் மிகவும் அழகாக விளக்கிக் கூறுகின்றது.
மேலும் திராவிட வேத உபநிஷத் சங்கதி, திராவிட வேத உபநிஷத் தாத்பர்ய ரத்நாவளி ஆகிய வடமொழி நூல்களைக் கொண்டும், காஞ்சி மஹாவித்வான் ஸ்ரீ அண்ணா ஸ்வாமி அருளிய த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் ஆகிய நூலைக் கொண்டும் திருவாய்மொழியின் சிறப்பை அறிந்துகொள்ளலாம்.
திருவாய்மொழிக்கு அமைந்துள்ள வ்யாக்யானங்கள்:
திருவாய்மொழிக்கு பிள்ளான் அருளிச்செய்த ஆறாயிரப்படி, நஞ்சீயர் அருளிச்செய்த ஒன்பதினாயிரப்படி, வாதிகேசரி அழகிய மணவாளச்சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி, பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த இருபத்து நாலாயிரப்படி மற்றும் நம்பிள்ளை ஈடு என்று வழங்கப்பெறும் நம்பிள்ளை சாதித்தருளி வடக்குத்திருவீதிப்பிள்ளை பட்டோலை கொண்ட ஈடு முப்பத்து ஆறாயிரப்படி என்னும் ஐந்து வியாக்யானங்களும், அவற்றுள் முப்பத்து ஆறாயிரப்படி வ்யாக்யானத்துக்குச் சீயர் அரும்பதம் மற்றும் அடைய வளைந்தான் அரும்பதம் ஆகிய இரண்டு குறிப்புரைகளும் உள்ளன.
நம்மாழ்வாரின் பெருமையைக் கூறும் நூல்கள் – மதுரகவிகள் அருளிச்செய்த கண்ணிநுண்சிறுத்தாம்பு மற்றும் கம்பநாட்டு ஆழ்வார் (கவிச்சக்ரவர்த்தி கம்பர்) அருளிச்செய்த நூறு பாக்களைக் கொண்ட சடகோபர் அந்தாதி ஆகியவை ஆகும்.
திருவாய்மொழியில் விளக்கப்பட்ட ஐந்து அர்த்தங்கள்:
ப்ராப்பயமான (அடையப்படும்) ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம்
ப்ராப்தாவான (அடைபவனான)
ஜீவாத்மாவின் ஸ்வரூபம்
அடைவதற்கு உபாயம்
அடைந்து பெறும் பலன் மற்றும்
அடைவதற்குத் தடை
ஆகிய ஐந்து விஷயங்கள் திருவாய்மொழியில் நன்கு விளக்கப்பட்டன.
வாழி எதிராசன்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்