ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
தனியன்
கார்த்திகே பரணி ஜாதம் யதீந்த்ர ஆச்ரித மாச்ரயே
ஜ்ஞான ப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முநிம்
ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம்
சதுர்த்த ஆச்ரம ஸம்பந்நம் தேவராஜ முநிம் பஜே
எம்பெருமானாருடைய நல்ல சீடராய் வேத சாஸ்த்ரார்த்தப் பொருளைச் செல்வமாக உடையவராய் ஸந்யாஸ ஆஸ்ரமத்தை உடையவரான தேவராஜ முனிவர் என்னும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை ஆஸ்ரயிக்கிறேன்.
ஸுவர்ணமுகி நதிக்கரையிலுள்ள விஞ்சை(விஞ்சிமூர்) என்னும் நகரத்தில் கார்த்திகை மாதம் பரணி நக்ஷத்ரத்தில் அவதரித்தவர் ஸ்வாமி அருளாளப் பெருமாள் எம்பெருமானார். இயற்பெயர் யஜ்ஞமூர்த்தி. ஏகதண்டி அத்வைத ஸந்யாசியாக வாழ்ந்தவர். எம்பெருமானாருடைய பெருமைகளை அறிந்து கொண்ட இவர், அத்வைதம் தழைக்கவும், எம்பெருமானாரை வாதத்திற்கு அழைத்து வெற்றிகொள்ளவும் தீர்மானித்து, நிறைய க்ரந்தங்களை எழுதி எடுத்துக்கொண்டு வித்யாகர்வத்தோடு தம் சிஷ்யர்களுடன் திருவரங்கம் வந்து சேர்ந்தார்.
ஸ்வாமி எம்பெருமானாரை நோக்கி “நீர் என்னோடு சாஸ்த்ர தர்க்கம் பண்ண வேணும்” என்று அழைத்தார். யஜ்ஞமூர்த்தி வாதத்தில் தோற்றால் எம்பெருமானாருடைய மதத்தை ஏற்றுக்கொண்டு, எம்பெருமானாருடைய பாதுகையை தன் ஸிரஸில் தாங்கி தன்னுடைய பெயரையும் எம்பெருமானாருடைய திருநாமத்துடன் சேர்த்து வைத்துக்கொள்வதாகவும் தெரிவித்தார். எம்பெருமானாரும் வாதத்தில் தாம் தோற்றால் க்ரந்த ஸந்யாஸம் மேற்கொள்வதாக(க்ரந்தங்களை எழுதாமலும் தொடாமலும் விட்டுவிடுவதாக) அறிவித்தாராம்.
16 நாட்கள் வாதம் நடைபெற்று வெற்றி தோல்வி இல்லாமல் முடிந்தது. வாதத்தின் 17 ஆம் நாள் முடிவில் யஜ்ஞமூர்த்தி பக்கமே ஓங்கியிருந்த நிலை ஏற்பட்டது. அன்று இரவு ஸ்வாமி எம்பெருமானார் தன் திருவாராதன பெருமாளான வரதராஜ பெருமாளிடம் “பேரருளாளப் பெருமாளே! நாதயாமுன முனிவர்கள் வளர்த்து அடியேனிடம் வந்த இந்த தரிசனம் அடியேனால் சிதைவு காண வேணுமென உமது திருவுள்ளமோ? இப்படி ஒரு திருவிளையாடலோ? என்று நினைத்துக்கொண்டு சயனிக்க, அவருடைய ஸ்வப்னத்திலே (கனவிலே) பேரருளாளப் பெருமாள் தோன்றி, எம்பெருமானாரே ஒரு பெரிய அறிவாளியை உமக்கு சீடனாக ஆக்குவதற்கே இதை செய்தோம் என்று சொல்லி பரமாசார்யரான ஆளவந்தாருடைய மாயாவாத கண்டணத்தைக் கொண்டு யஜ்ஞமூர்த்தியை வாதத்தில் ஜயிப்பீராக என்று அருளினாராம்.
மறுநாள் காலை மிகுந்த சந்தோஷத்துடனும், மநோபலத்துடனும் மதம் கொண்ட யானையைப் போல வாதத்திற்கு எழுந்தருளிய எம்பெருமானாரைக் கண்ட யஜ்ஞமூர்த்தி, ஸ்வாமியின் முகவொளி கண்டு மேலே வாதிட விரும்பாமல் ஸ்வாமி திருவடிகளில் தண்டம் சமர்ப்பித்து “அடியேன் தோற்றேன், இரங்கி அருளவேணும்” என்று பிரார்த்தித்தார்.
ஸ்வாமி எம்பெருமானார் வாதம் தொடரட்டும் என்று சொல்லி வாதத்தைத் தொடங்கி முறைப்படி வாதத்தில் வென்று வெற்றி கொண்டார். அவரும் தமது அத்வைத கொள்கையைத் த்யஜித்து சிகையும் யக்ஞயோபவீதத்தையும் தரித்து த்ரிதண்டமேந்தி ஸ்ரீவைஷ்ணவ முக்கோல் பகவர் ஆனார். பேரருளாளப் பெருமாளின் அருளால் இவர் தமக்கு சிஷ்யரானபடியாலும், எம்பெருமானாரிடம் வாதத்தில் தோற்ற படியாலும் வாத நிபந்தனைப்படி எம்பெருமானாருடைய திருநாமத்தோடு சேர்த்து அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று திருநாமம் சூட்டப்பெற்றார்.
ஆசார்யனான ஸ்வாமி எம்பெருமானாரிடம் ஸகல அர்த்தங்களையும் கற்றறிந்து அதை பின்புள்ளாரும் அறிய வேண்டி, ஸ்வாமியிடம் அனுமதி பெற்று ஞான ஸாரம் மற்றும் ப்ரமேய ஸாரம் ஆகிய இரண்டு தமிழ் ப்ரபந்தங்களை அருளிச்செய்தார்.
ஞானசாரம் 40 பாசுரங்களைக் கொண்டது. நான்கு வேதங்களிலும் சொல்லப்பட்ட அர்த்த விசேஷங்களை சாரமாக எடுத்துரைக்கும் ப்ரபந்தம். அருளாளப் பெருமாள் எம்பெருமானார் தம்முடைய பரம கருணையாலே தத்வம், ஹிதம், புருஷார்த்தம் ஆகியவற்றின் கருத்தை அனைவரும் அறியலாம்படி தமிழில் அருளிச் செய்த ப்ரபந்தம் ஞானசாரம்.
ப்ரமேய ஸாரம் 10 பாசுரங்களைக் கொண்டது. முதல் மூன்று பாசுரங்களால் ப்ரணவத்தின் பொருளையும், அடுத்த நான்கு பாசுரங்களால் திருமந்திரத்தின் இரண்டாவது பதமான நம: என்ற சொல்லின் பொருளையும், எட்டாவது பாசுரத்தால் நாராயணாய என்ற சொல்லின் பொருளையும், ஒன்பதாவது பாசுரத்தில் ஆசார்ய வைபவத்தையும், சரமப் பாசுரமான 10 ஆம் பாசுரத்தில் ஆசார்யன் செய்யும் உபகாரத்தையும் அருளிச்செய்துள்ளார்.
வாழி யதிராசன்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்