ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:
பெரிய ஜீயர் ஸ்வாமியால் நியமிக்கப்பட்ட அஷ்டதிக்கஜங்களில் முதல்வரான பொன்னடிக்கால் ஜீயர் ஸ்வாமி (ஒன்றான வானமாமலை ராமாநுஜ ஜீயர் ஸ்வாமி) – புரட்டாசி புனர்வசு
ஒரு சமயம் ஒன்றான வானமாமலை ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் ஸ்வாமி எழுந்தருளியிருந்த இடத்திற்கு வந்து திருவடிஸம்பந்தியான(வானமாமலை மடத்து சிஷ்யை ) சின்னியம்மாள் என்றொரு பெண்பிள்ளை தண்டன் சமர்ப்பித்து நிற்க, ஜீயர் ஸ்வாமி அவளை கடாக்ஷித்து ” பெண்ணே உனது தேசமேது, நாடேது, ஊரேது என்று பல கேள்விகளை கேட்க அப்பெண்மணியும் ஸ்ரீவைஷ்ணவ நிஷ்டைக்குச் சேர பதில் உரைத்தாராம். ஜீயர் ஸ்வாமிக்கும் இந்தப் பெண்மணிக்கும் நடத்த உரையாடலின் தொகுப்பு சின்னியம்மாள் ரஹஸ்யம் என்று போற்றப்படுகிறது. ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் தெரிந்து கொண்டு அனுஷ்டிக்க வேண்டிய விஷயங்கள் ஆகும்.
கேள்வியும் பதில்களும்
1. கேள்வி : பெண்ணே! உன் தேசமேது? நாடேது? நித்யவாசமேது?
பதில்: திருவழுதிவளநாடென்ன (ஆழ்வார் திருநகரி)
2. கேள்வி: ஊரேதென்ன
பதில்: திருக்குருகூரென்ன
3. கேள்வி : வீடேதென்ன
பதில்: பண்டுடையான் வீடு என்ன (நம்மாழ்வார் வீடு)
4. கேள்வி: குலமேதென்ன
பதில் : அச்சுத குலம் என்ன
5. கேள்வி: வேதமேதென்ன
பதில்: திராவிட வேதம் என்ன
6. கேள்வி: கோத்ரமேதன்ன:
பதில்: பராங்குச கோத்ரம் என்ன
7. கேள்வி:ஸுத்ரம் ஏதென்ன:
பதில்: ராமாநுஜ ஸுத்ரம் என்ன
8. கேள்வி: காரிகை ஏதென்ன
பதில்: பரகால காரிகை என்ன(எந்த சாகை அத்யயனம்)
9. கேள்வி: குடி ஏதென்ன
பதில்: அஞ்சு குடி என்ன (பகவானுக்கு என்ன பாங்கு குறைவு வருமோ என்று அஞ்சுகின்ற ஆழ்வார்கள் குடி)
10. கேள்வி: பந்துக்கள் யார் என்ன
பதில்: ஆத்ம பந்துக்கள் என்ன
11. கேள்வி:உறவாரென்ன
பதில்: ஒட்ட உணர்ந்தவர் என்ன
12. கேள்வி: உற்றார் ஆரென்ன
பதில்: உற்றதும் உன் அடியார் என்ன
13. கேள்வி: தகப்பனார் ஆரென்ன
பதில்: தெய்வநாயகன் என்ன
14. கேள்வி: தாயார் ஆரென்ன
பதில்: ஸ்ரீவரமங்கை என்ன
15. கேள்வி: புக்கவிடம் எவ்விடம் ஏதென்ன:
பதில்: வானமாமலை என்ன
16. கேள்வி: பர்த்தா ஆரென்ன
பதில்: வரமங்கை முனிவர் என்ன
17. கேள்வி: மாமனார் ஆரென்ன
பதில்: காந்தோபயந்ததாவென்ன (ஆசார்யனுக்கு ஆசார்யன்)
18. கேள்வி: உத்யோகம் ஏது என்ன
பதில்: பாகவத கைங்கர்யம் என்ன
19. கேள்வி: அத்தால் ப்ரயோஜனம் என்ன
பதில்: அதுவே ப்ரயோஜனம் என்ன(பரம புருஷார்த்தம்)
20. கேள்வி: அதிகாரம் ஏதென்ன
பதில்: ஸர்வாதிகாரமென்ன(சரீரம் சரீரீ பாவம்)
21. கேள்வி: நிஷ்டை ஏதென்ன
பதில்: பஞ்சமோபாய நிஷ்டை(ஆசார்ய அபிமானம்)
22. கேள்வி: உபாயமேதென்ன
பதில்: சரமோபாயமென்ன
23. கேள்வி: அபிமானமேதென்ன
பதில்: பாகவத அபிமானமென்ன
24. கேள்வி: ப்ரார்த்தனை ஏதென்ன
பதில்: கைங்கர்ய ப்ரார்த்தனையென்ன
ஜீயர் ஸ்வாமியும் மிக உகந்தருளி ஸ்ரீபாத தீர்த்தம் மற்றும் தளிகை பிரசாதம் சாதித்து அநுக்ரஹித்து அருளினார் என்பது ப்ரசித்தம்.
மேலே உள்ள கேள்வி பதில்களின் சுருக்கம்.
நம்மாழ்வார் ப்ரபந்நஜனகூடஸ்தர். அவரே நம் குல முதல்வர். அவருடைய சம்பந்தத்தையிட்டு திருக்குருகூர் என்ற ஆழ்வார் திருநகரியைத் தமது பிறந்த ஊராகவும், புகுமூர், பர்த்தா மற்ற விஷயங்கள் அனைத்தும் ஆசார்ய ஸம்பந்தத்தையிட்டும் அமைந்தவை ஆகும். ஆசார்யன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன், ஆகையாலே ஆசார்யனை பர்த்தா என்று சொல்லிற்று ஆயிற்று. பாகவத கைங்கர்யமும் ஆசார்யமுகோல்லாசமுமே ப்ரதான ப்ரயோஜநம் ஆகும். ஆசார்ய அபிமானமே உய்வு உபாயம் மற்றும் ஆசார்ய கைங்கர்யமே புருஷார்த்தம் ஆகும்.
வாழி எதிராசன்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்