திருப்பள்ளியெழுச்சி:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:
மூன்றாம் பாசுரம்:
சுடரொளி பரந்தன சூழ் திசையெல்லாம்*
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி*
படரொளி பசுத்தனன் பனி மதி இவனோ*
பாயிறுள் அகன்றது பைம்பொழிற் கமுகின்*
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற*
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ*
அடலொளி திகழ் தரு திகிரியந்தடக்கை*
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே*
பாசுர அர்த்தம்:
கண்ட இடமெங்கும் சூரிய ஒளி பரவ, நக்ஷத்ரங்களினுடைய ஒளியும் குளிர்ந்த சந்திரனுடைய ஒளியும், இருளும் நீங்கியது. விடியற் காலையில் வீழும் காற்றானது, பசுமையோடு காணப்படும் பாக்குமரங்களினுடைய மடலைக் கீற, அதனாலே பாக்குமரத்தினுடைய அழகிய பாளைகள் பரிமளித்து வீசா நின்றது. தேஜசு மிக நிறைந்த திருவாழி ஆழ்வானை அழகிய திருக்கையிலே உடைய அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.
நான்காம் பாசுரம்:
மேட்டிள மேதிகள் தளை விடும் ஆயர்கள்*
வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும்*
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்*
இரிந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை*
வாட்டிய வரிசிலை வானவரேறே*
மாமுனி வேள்வியைக் காத்து* அவபிரதம்
ஆட்டிய அடுதிறல் அயோத்தி எம் அரசே*
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே*
பாசுர அர்த்தம்:
எருதுகளை மேய்ச்சலுக்கு கட்டவிழ்த்து விடும் இடையர்கள் ஊதுகிற புல்லாங்குழலின் நாதமும், எருதுகளின் கழுத்தில் கட்டப் பட்டுள்ள மணிகளின் ஓசையும், இவை இரண்டின் ஓசையால் ஏற்பட்ட அழகான இசையும் அனைத்து திசைகளிலும் பரவி ஆயிற்று. வண்டுகளும் திரள் திரளாக ஆரவாரித்து கிளம்பிவட்டன. ராக்ஷச குலத்தை அழித்த அழகிய சார்ங்கத்தை உடைய வானவர் தலைவனே, விஷ்வாமித்ரரின் யாகத்தை நிறைவேற்றுவித்து, விரோதிகளை அழித்தவனே, அயோத்திக்கு அரசனே, எமக்குத் தலைவனே! அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய்.
தாசானு தாசன்
இராமானுஜ சிஷ்யன்