திருப்பள்ளியெழுச்சி:
ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
முதல் பாசுரம்:
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்*
கன இருள் அகன்றது காலைஅம் பொழுதாய்*
மதுவிருந்தொழுகின மாமலர் எல்லாம்*
வானவர் அரசர்கள் வந்து வந்தீண்டி*
எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த*
இருங்களிற்றீட்டமும் பிடியொடு முரசும்*
அதிர்தலில் அலைகடல் போன்று உளதெங்கும்*
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!
பாசுர அர்த்தம்:
திருவரங்கத்தில் பள்ளிகொண்டு இருக்கும் பெருமானே, கிழக்கு திசையிலே சூரியன் உதிக்க, இருளானது நீங்கியது. அழகிய காலைப் பொழுது வந்தவுடன், மலர்கள் எல்லாம் விகாசம் அடைந்து தேன் நிறைந்து காணப்பட்டன. தேவர்களும் அரசர்களும் தெற்கு பக்கத்திலே திரண்டனர். அவர்களோடு வந்த யானை கூட்டங்களும், பெரிய வாத்தியங்களும் சப்திக்கும் போது எழும் ஒளியானது கடலோசையை ஒத்து இருந்தது. ஆதலால் தேவரீர் திருப்பள்ளியை விட்டு எழ வேணும் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.
இரண்டாம் பாசுரம்:
கொழுங்கொடி முல்லையின் கொழு மலர் அணவிக்*
கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ*
எழுந்தன மலரணைப் பள்ளிகொள் அன்னம்*
ஈன் பனி நனைந்த தம் இருஞ்சிறகுதறி*
விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ் வாய்*
வெள்ளையிறுற அதன் விடத்தினுக்கு அனுங்கி*
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த*
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே*
பாசுர அர்த்தம்:
காற்றானது முல்லைச் செடியில் உள்ள மலர்களைச் சூழ்ந்து கொண்டு வீசா நின்றது. புஷ்பங்களிலே சயனிக்கும் பறவைகளானது பனி நிறைந்த தங்களுடைய அழகிய சிறகுகளை உதறிக் கொண்டு உறக்கம் களைந்து எழுந்து ஆயிற்று. முதலையின் பெரிய வாயிலுள்ள பற்களாலே கடிபட்டு, அம்முதலையின் பல்விஷத்தாலே மிகவும் நோவுபட்ட கஜேந்திர ஆழ்வானுடைய துக்கத்தை போக்கி அருளிய அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் இப்பாசுரத்தில் ஆழ்வார்.
அடியேனது பதிவில் குறை இருக்குமாயின் அடியேனைத் திருத்திப் பணிகொள்ளுமாறு பிரார்த்திக்கிறேன்.
தாசானு தாசன்
இராமானுஜ சிஷ்யன்