திருப்பள்ளியெழுச்சி:
ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
திருப்பள்ளியெழுச்சி என்னும் திவ்யப்ப்ரபந்தத்தை அருளிச் செய்தவர் ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஆகும். பத்து பாசுரங்களை அருளிச் செய்துள்ளார். ஸ்ரீ வைணவர்கள் அனுதினமும் அனுசந்திக்க வேண்டிய நித்யானுசந்தானத்திலே இப்ப்ரபந்தமும் அடங்கும். எம்பெருமான் உகந்து எழுந்தருளி இருக்கும் திவ்யதேசங்களிலும் ஸ்ரீ வைணவப் பெரியோர்களின் திருமாளிகைகளிலும் எம்பெருமானுக்கு நித்ய ஆராதனம் நடைபெறும்போது அனுசந்திப்பது வழக்கம். இந்த பிரபந்தத்திலே ஆழ்வார் நிறைவான அர்த்தங்களை மிகவும் எளிமையாக பிரசாதித்துள்ளார். நாமும் ஆழ்வார் காட்டின வழியிலே இந்த பாசுரங்களைக் கொண்டு எம்பெருமானுக்கு கைங்கர்யம் பண்ணுவோம்.
திருவரங்க நாதனைத் துயிலெழுப்பும் பாசுரங்கள்:
ஸ்ரீ திருமாலை ஆண்டான் அருளிச் செய்த தனியன்:
தமேவ மத்வா பரவாசுதேவம்
ரங்கேஷயம் ராஜவதர்ஹநீயம்
ப்ராபோதிகீம் யோக்ருத சுக்திமாலாம்
பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே
தனியன் விளக்கம்:
அரசனைப் போல் பூஜிக்கத் தகுந்தவரும், திருவரங்கத்திலே பள்ளி கொண்டிருக்கும் எம்பெருமானை பரவாசுதேவனாக பிரதிபத்தி பண்ணி, திருப்பள்ளி உணர்த்துமதான திவ்யப்ரபந்தத்தை(திருப்பள்ளிஎழுச்சியை) அருளிச் செய்தவருமான தொண்டரடிப்பொடி ஆழ்வாரை துதிக்கிறேன்.
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் ஸ்வாமி அருளிச் செய்த தனியன்:
மண்டங்குடி என்பர் மாமறையோர் மன்னிய சீர்*
தொண்டரடிப்பொடி தொன்னகரம்* வண்டு
திணர்த்த வயல் தென்னரங்கத்தம்மானைப்*
பள்ளி உணர்த்தும் பிரான் உதித்த ஊர்*
தனியன் விளக்கம்:
இந்தத் தனியனில் ஆழ்வார் திருவவதரித்த நகரம் திருமண்டங்குடி என்று அருளிச் செய்கிறார். வண்டுகள் நிறைந்து இருக்கும் கழனிகள் சூழ்ந்த அழகிய திருவரங்கத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானுக்கு திருப்பள்ளி உணர்த்துபவரரும், தொண்டரடிப்பொடி என்னும் திருநாமம் கொண்ட இந்த ஆழ்வார் திருவவதரித்த இடமாவது – மாமறையோர்கள்(சிறந்த வைதிகர்கள்) வாழ்வதற்கு ஏற்ற இடமான திருமண்டங்குடி என்னும் நகரம் என்று பெரியோர்கள் பகர்வர்.
பாசுர அர்த்தம் அடுத்த பதிப்பிலே கொடுக்கப் படும்.
அடியேன் தாசானு தாசன்
இராமானுஜ சிஷ்யன்